பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, December 31, 2012

பூத்தது புத்தாண்டுப் பூ (கவிதை)



காலச் செடியில்
வருடப் பூவொன்று
உதிர்ந்து விழ
மொட்டு விரித்தது
புதுப் பூ!

பூத்தது புத்தாண்டுப் பூ!




ஓவ்வொரு விடியலும்
எதிர்பார்ப்போடு விடிவது போன்று
பூத்த நல்லாண்டும்
நலங்கள் தரவேண்டும்
நானிலத்தாருக்கு நாளும்!


வாழ்வின் வசந்தங்களும்
சுகமான வாழ்வும்
தென்றலாய் வீச வேண்டும்
இனிக்கும் புத்தாண்டில்;!

இனி
இன்பங்கள் பொங்க
பூப்பாய்  பூவே!

கனவுகள் நனவாக
எதிர்பார்ப்புக்கள் நிறைவேற
சோகங்கள் துவண்டோட
இருளகன்று ஒளி வீச
இறையருள் பெருக
புதிய ஆண்டே புதிதாய்ப் புறப்படு!

சந்திரனாய் சூரியனாய்
வளியாய் , ஒளியாய்
மழையாய் , நீராய்
நன்மைகள் மட்டுமே நீ
நாள் தோறும் செய்!


எங்கள் நாட்குறிப்பு வயலில்
நீ
நல்லதை நடு!

எங்கள் காலண்டரில்
நீ
இன்பத்தை விதை!

எங்கள்
அறுவடைகளை
அர்த்தமுள்ளதாக்கு!


எங்கள்
வாழ்க்கைப் பாதையெங்கும்
செங்கம்பளம் விரி!
பூக்களை தூவு!
நறுமணம் தெளி!

வா புத்தாண்டே வா!
நலங்கள் கோடி தா!


-   கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்