பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, July 28, 2014

புனித நோன்பின் போதனைகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - எம். இஸட். ஷாஜஹான்


(இக்கட்டுரை (28-7-2014) அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதம் மாதம் எம்மை விட்டு பிரிந்து விட்டது. ரமழான் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைத்த எமக்கு  அல்லாஹ்வின் அருளினால்; நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

இறை பள்ளிவாசல்களில் தக்பீர் முழக்கம் ஒலிக்கிறது. ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை 'ரமழானில்' நோற்று விட்டு 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டு நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய பெருநாள்
தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து , நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி 'தக்பீர்' முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர்.

பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வர்.

அதே போல், தமது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் வீடுகளுக்குச்  சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். இவ்வாறு,'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.


பெருநாள் தினத்தில் சிந்திப்போம்

பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து நல்லமல்கள் பல புரிந்து இன்று பெருநாள் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான இனிய நாளில் புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை, போதனையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
புனித நோன்பை நோற்று விட்டுடோம்.  இஸ்லாத்தின் நான்காவது கடைமையை நிறைவேற்றிவிட்டோம் என்று நாங்கள் நினைத்துவிடக் கூடாது. நோன்பு கற்றுத் தந்த பயிற்சிகளையும் போதனைகளையும் இனி வரும் மாதங்களில் பின்பற்ற வேண்டும்.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும் அந்த வாழ்க்கை முறைக்கான பயிற்சியை நோன்பு வழங்கியது. சரியான முறையில் நோன்பு நோற்றதன் மூலமாக இனிய குணம்,கற்புடைமை,பொறுமை,நேர்மை, நன்நடத்தை,சகிப்புத் தன்மை, உளத் தூய்மை, வீரம், ஏழைகளின் துயரை உணரும் தன்மை, உதவும் மனப்பான்மை,மனித நேயம் என்பன போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒருவர் அடைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

எனவே, நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல, இனிவரும் நாட்களிலும்  உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பூரண ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும். தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை கவ்விக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்புக் காலங்களில் ஐவேளை தொழுகையோடு, சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வரவேண்டும்.

ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வரவேண்டும்.ஸகாத், சதக்கா, ஸக்காத்துல் பித்ரானா  போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸகாத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் ஸகாத் கொடுக்க வேண்டும்.

இந்த நற்பண்புகளை ஒரு முஸ்லிம் ஏனைய மாதங்களிலும் கடைபிடிக்க வேண்டும். அதற்கானே பயிற்சியே ரமழான் மாதமாகும்.
இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதுதான். இறை விருப்பத்தையம் அவனது நெருக்கத்தையும் அடைவதில் ஒருவன் வெற்றி பெற்றால் அதுதான் பெரிய வெற்றியாகும். அதுதான் பெரிய பெருநாளாகும்.
அந்த வகையில் இறையச்சம் என்ற ஆடையை அணிவதன் மூலமாக உண்மையான பெருநாளைக் கொண்டாட முடியும்.நாம் மனித இனத்தை இறைவனின் பக்கம் கொண்டு போய் சேர்த்தால் அதுதான் நமக்கான உண்மையான பெருநாளாக இருக்கும்.
ஆகவே, ஒரு மாதம் முழுதும் பெற்ற பயிற்சிகள்,அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும்.
'தக்பீர்' ஓசை இறை பள்ளிவாசல்களில் முழங்க, பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக. ஈத் முபாரக்!!



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்