பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, July 18, 2015

மனிதனைப் புடம் போட்ட ரமழான் மாத நோன்பின் இனிய பெருநாள்

(18-7-2015 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை.)

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஓரு மாதம் முழுதும் நோற்றுவிட்டு இன்று நாங்கள்  இனிய நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.
புண்ணியம் பொழிந்த கண்ணியமிகு மாதத்திற்கு விடை கொடுத்து விட்டு  இனிய ஈதுல்; பித்ர் பெருநாளை கொண்டாடுகிறோம். ஆம்! 'ஷவ்வால்' மாத தலைப்பிறையைக் கண்டுவிட்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.




முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.

இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து,குளித்து புத்தாடையணிந்து , நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி 'தக்பீர்' முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வார்கள், பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வாரகள்;. அதே போல், தமது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் இல்லம் சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.


நோன்பின் போதனைகளை மறக்கலாகாது

'தக்பீர்' ஓசை இறை பள்ளிவாசல்களில் முழங்க, பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை நாங்கள் மறந்துவிடக்கூடாது. இந்த இனிய நாளில் புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை, போதனையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஒரு மாதம் முழுதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். நோன்பு  முடிந்தவுடன் பழைய நிலைக்கு சென்றுவிடக் கூடாது. ரமழான் மாத நோன்பானது  ஏனைய  பதினொரு மாதங்களில் ஒரு முஸ்லிம் வாழ்வதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதற்கான பயிற்சியை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் மறக்கலாகாது.

இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வாழ்க்கை முறைக்கான பயிற்சியை நோன்பு வழங்கியது. அதனால்தான் நோன்பு மனிதனை புடம் போடுகிறது என்று கூறப்படுகிறது.  சரியான முறையில் நோன்பு நோற்றதன் மூலமாக இனிய குணம், கற்புடைமை,பொறுமை, நேர்மை, நன்நடத்தை, சகிப்புத் தன்மை, உளத் தூய்மை, வீரம், ஏழைகளின் துயரை உணரும் தன்மை, உதவும் மனப்பான்மை, மனித நேயம் என்பன போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒருவர் அடைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நற்பண்புகளை ஒரு முஸ்லிம் ஏனைய மாதங்களிலும் கடைபிடிக்க வேண்டும். அதற்கானே பயிற்சியே ரமழான் மாதமாகும்.
எனவே, ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வரவேண்டும். ஸகாத், சதக்கா, ஸக்காத்துல் பித்ரானா  போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸகாத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
போட்டி, பொறாமை, கோபதாபங்களை விட்டொழிந்து ஒருவருக்கொருவர் 'ஸலாம்' கூறி பழையனவற்றை மறந்துவிட வேண்டும். இவ்விடயத்தை பெருநாள் தினத்தில் அதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாம் சாந்தியை,சமாதானத்தை, சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது என்பதை ஒவ்வொருவரும் நினைவிற்கொள்ள வேண்டும்.

இறையச்சம் எனும் ஆடை

இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதுதான். இறை விருப்பத்தையம் அவனது நெருக்கத்தையும் அடைவதில் ஒருவன் வெற்றி பெற்றால் அதுதான் பெரிய வெற்றியாகும். அதுதான் பெரிய பெருநாளாகும். அந்த வகையில் இறையச்சம் என்ற ஆடையை அணிவதன் மூலமாக உண்மையான பெருநாளைக் கொண்டாட முடியும்.
இன்றைய பெருநாளைக்காக நாம் அணிந்துள்ள புத்தாடைகள் ஒருநாள் பழையதாகிவிடும். ஆனால் அந்த நிரந்தரமான பெருநாளுக்கான ஆடைகள் பழையதாய்ப் போய்விடுவதில்லை. அது நிரந்தரமான பெருநாளாகும். நாங்கள் அந்த நிரந்தரமான பெருநாளைக்கு தயாராக வேண்டும். அப்படியானால் இறையச்சம் எனும் ஆடையை நிரந்தரமாக அணிந்து கொள்ள வேண்டும்.
'தக்பீர்' ஓசை இறை பள்ளிவாசல்களில் முழங்க, பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக. ஈத் முபாரக்!!




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்