பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, May 2, 2014

நாட்டை உலுக்கி வரும் முகமூடி குழுக்களின் கொள்ளைகள் - கலாநெஞ்சன்

 (இக்கட்டுரை 27-4-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

எமது நாட்டை தற்போது இரண்டு வகையான குழவினர் உலுக்கி வருகின்றனர். அவர்களின்  சட்டவிரோத செயற்பாடுகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தருபவைகளாக உள்ளன.  ஒரு குழுவினர் காவி உடை தரித்த பேரினவாதிகள். மற்றைய குழவினர் ஆயுதம் ஏந்திய  முகமூடி கொள்ளையர்கள்.
ஒரு குழவினர் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கொள்ளையடிக்கின்றனர். மற்றைய குழுவினர் நிதி நிறுவனங்களிலும்;, நகைக் கடைகளிலும் பணத்தையும் நகைகளையும்
கொள்ளையடிக்கின்றனர்.
இந்த இரண்டு குழுவினரதும்  செயற்பாடுகள் சட்ட விரோதமானதும், நீதிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் சவாலான விடயங்களாகவும் உள்ளன. அடுத்த நிமிடம், அடுத்த மணித்தியாலம் அல்லது அடுத்த நாள் என்ன நடக்கும் என்று இவ்விரு குழுவினரதும் நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள்  அறிந்து கொள்வதற்கு அதிக அக்கறை செலுத்துவதையும், அதுபற்றி  தமக்கிடையே கருத்துக்கள் பரிமாறுவதையம், உரையாடுவதையும் அவதானிக்க முடிகிறது.
ஊடகங்களில் இந்த இருதரப்பினர் தொடர்பாகவும் அடிக்கடி செய்திகள், கட்டுரைகள் இடம்பெற்று வருகின்றன.  நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் எமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்று எம்மை நாமே அடிக்கடி கேட்க வேண்டியுள்ளது.
இந்த கட்டுரை காவி உடை தரித்த  அந்த பேரினவாத குழுவினரை ஆராயாமல், ஜெக்கட் மற்றும் முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசம் அணிந்து ஆயுதங்களுடன்  மோட்டார் சைக்கிள்களில் வரும் அந்த முக மூடி குழுவினர் தொடர்பாக கவனம் செலுத்துகிறது.


ஆங்கிலத் திரைப்படங்களை விஞ்சும் எமது நாட்டுக் கொள்ளை

ஆங்கிலத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்து வியப்படைந்திருக்கிறோம். பலத்த பாதுகாப்புடன்  வைத்திருக்கப்படும் விலை உயர்ந்த இரத்தினக்; கற்கள் அல்லது புராதனப் பொருட்களை  கதாநாயகன் அல்லது திருடர்கள் திருடுவதை பார்த்து வியந்திருக்கிறோம். விசிலடித்திருக்கிறோம். அவை எல்லாம் நடிப்பாகும். சிலவேளை, உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கும் போது மிகைப்படுத்தப்பட்டும் வீரதீரக் காட்சிகள்; காட்டப்படுகின்றன.
ஆனால், அந்தக் காட்சிகளை எல்லாம் விஞ்சும் வகையில் தற்போது எமது நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. இந்த கொள்ளைச் சம்பவங்கள்  திரைப்படங்களில் பல டேக்குகளில் எடுக்கப்படுவது போல் அல்லாமல் ஒரே டேக்கில் எடுக்கப்படுகின்றன.
ஆம். தற்போது முகமூடி அணிந்து கொள்ளைகளில் ஈடுபடுவோர் தொடர்பாக வாரத்திற்கு குறைந்தது ஒரு சம்பவமாவது  இடம்பெறுகிறது. முன்னர் வெள்ளை வேன்கள்களில் வந்து ஆட்களை கடத்தினார்கள். தற்போது மோட்;டார் சைக்கிளில் வந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
கடந்த  செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில்  (22, 23) மொறட்டுவை சீ.டீ.பி. தனியார் மற்றும் கிருலப்பனை  செலான்; வங்கிகளில்  முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசம் அணிந்தபடி வந்த கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்;.ஒன்று வெற்றியில் முடிவடைய மற்றையது தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆம். மொறட்டுவை ராவதாவத்தை பிரதேசத்தில் உள்ள  சீ.டீ.பி. தனியார் வங்கியில் ஆயதம் தாங்கிய முகமூடி நபர்கள் இருவரால் 7 இலட்சத்து  77 ஆயிரம் ரூபா பணம் (கடந்த செவ்வாய்க்கிழமை) கொள்ளையிடப்பட்டுள்ளது.
கிருலப்பனை சம்பவம் அந்த வங்கியின் காவலாளியின் துணிகர முயற்சியினால் முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த வங்கியின் காவலாளி கடமை நேரத் துப்பாக்கியினால்; கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து கொள்ளையர்கள்  இருவரும் தாம் வந்த மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு வேறு மோட்டார் சைக்களில் தப்பிச் சென்றுள்ளனர.;
கடந்த டிசம்பர் மாதம்  26 ஆம் திகதி முதல் இதுவரை இது போன்று 14 கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும்இவற்றில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தீர்வு காண முடிந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 முகத்தை முழமையாக மறைக்கும் தலைக் கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திவரும் இனந்தெரியாத நபர்கள் மேற்கொள்ளும் இதுபோன்று கொள்ளைச் சம்பவங்கள்  நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவற்றில் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நான்கு பிரதான கொள்ளைச் சம்பவங்கள்  அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ளன.
மீன் பிடித்துறை, உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறைக்குப்; பெயர் பெற்ற நீரகொழும்பு மாநகரம்   முகமூடி கொள்ளையர்களின் கைவரிசைக்கு ஆளாகும்  நகரமாகவும் பிரபல்யம் பெற்று வருகிறது.
முதலாவது சம்பவம் சீதுவை ரயில் கடவை அருகில் நிலேகா ஜுவலரியில் இடம் பெற்றது. இரண்டாவது சம்பவம் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுவல் லங்கா எனும் பிரபல நகை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி  பகல் வேளையில் இடம் பெற்றது. இதன் போது இரண்டு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட வெளிநாட்டு பணம் முகத்தை முழுமையாக மூடி வந்த நான்கு ஆயததாரிகளால் கொள்ளையிடப்பட்டது.
இந்தப் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் மேல் மாகாண சபை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர. ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கவிடயாகும்.
இதேவேளை, இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக  தேடப்பட்டு வரும் இன்னொரு சந்தேக நபரான எப்பல் ருவன்  என்பவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாகவும். சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட  பணம் நாட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்படவில்லை எனவும், அதில் ஒரு சிறிய தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே தெரிவிக்கிறார்.
இந்நிலையில், மூன்றாவது  கொள்ளைச் சம்பவம் சீதுவை லியனகே முல்லை, 18 ஆம் கட்டையில் அமைந்துள்ள  24 மணிநேரம் சேவையில் ஈடுபடும் ,  கொமர்ஷல் வங்கியில் 31-3-2014 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது  ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் நால்வர், வங்கி முகாமையாளரை  கத்தியால் குத்திவிட்டு 15 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றனர்.
தற்போது  நான்காவது கொள்ளைச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி (174-2014) இரவு 7.30 மணியளவில்   நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல நகை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையமான புஷ்பா ஜுவலரியில்; இடம் பெற்றுள்ளது.

 நீர்கொழும்பு புஷ்பா ஜுவலரியில்  துணிகர கொள்ளைச் சம்பவம்

17-4-2014  அன்று இரவு 7.30 மணியளவில்  கடையை மூடுவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்கள் சிலரும் கடையில் இருந்தனர்.
அவ்வேளை, முகத்தை முழுமையாக  மூடும் ஹெல்மட் அணிந்த துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் அறுவர் கடையினுள் புகுந்தனர்.
முதல் தாக்குதல் கடையின் பாதுகாப்பு ஊழியரான சிங்கராஜா மீது மேற்கொள்ளப்பட்டது. நிராயுதபாணியான வயதான அந்த நபரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரைத் தாக்கி உள்ளே தள்ளியபடி சென்ற ஆயததாரிகள் தாங்கள்; வந்த வேளையை துரித கதியில் ஆரம்;பித்தனர்;.
ஆயததாரிகளில் ஒருவன்  வெளிநாட்டு நாணய மாற்றுப் பகுதிக்குச் சென்று  அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு வெளிநாட்டுப் பணத்தை தயாராக கொண்டு வந்த பையினுள் போட ஆரம்பித்தான். இன்னொருவன் ஆயத முனையில் நகைகளை பையினுள் போட்டுக் கொண்டான். இதற்கிடையில் வாயிலில் ஒருவன் காவலிருந்தான். இன்னொருவன் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரை துப்பாக்கியினால்  தாக்கினான். இதற்கிடையில் சிவப்பு நிற ரீ சேர்ட்; அணிந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர் கடையினுள் நுழைகிறார். அவர்  ஹெல்மட் அணிந்திருக்கவில்லை. ஆயுததாரிகளும் அவரை ஒன்றும் செய்யவில்லைஅந்த மர்ம நபரும் ஆயுததாரிகளை கண்டு பயம் கொள்ளவில்லை. கொள்ளையர்கள் வெளியேறும் போது துப்பாக்கி வேட்டுக்களை பிரயோகித்தபடி தாம்; வந்த  மூன்று மோட்டார் சைக்கிள்களிலும்  தப்பிச் சென்றனர்.
அவர்கள் செல்லும் பொது கொள்ளையடித்த நகைகளில் சில  பையிலிருந்து வெளியே விழுகின்றன. பிறகு அவை ஊழியர்களால்  கண்டெடுக்கப்படுகின்றன.
 இரவு 7.30  மணிக்கு ஆரம்பமான ஒப்பரேசன்; (கொள்ளைச் சம்பவம்)  7.34 மணிக்கு வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைகள்  நான்கு நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
ஆங்கில திரைப்படத்தை விஞ்சும் வகையில் இடம் பெற்ற  கொள்ளைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் ஆளாக்கியுள்ளது.
நகை கடையின் காவலாளி சிஙகராஜா இது பற்றி தெரிவிக்கையில், துப்பாக்கிகளுடன் ஆறுபேர் கடையினுன் நுழைந்தனர். வெளியில் காவலில் இருந்த என்னை ஒருவர் தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையிட்டார் மற்றையவர் நகைகளை கொள்ளையிட்டார். அவர்கள் தாம் கொண்ட வந்த துணியினால் தைக்கப்பட்ட பையினுள்; அதனை போட்டனர். சம்பவம் இடம்பெறும் போது வாடிக்கையாளர்கள் ஏழு பேரும், ஊழியர்கள் 24 பேரும் கடையினுள் இருந்தனர். கொள்ளைர்கள் கடையை விட்டு வெளியேறும் போது  கடைக்கு வெளியே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபடி மோட்டார்; சைக்கிளில் தப்பிச் சென்றனர். அவர்;கள் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்றார்.
இதேவேளை, இச்சம்பவத்திற்கு ரி.56 ரக துப்பாக்கிகள் இரண்டும் கல்கட்டஸ் ரக துப்பாக்கி இரண்டும் , ரிவோல்வர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடைக்கு வெளியே துப்பாக்கிச் சன்னங்கள் மூன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன.

பொலிஸாரின் வேண்டுகோளும் சுயபாதுகாப்பு நடவடிக்கைகளும்
இதேவேளை, கொள்ளைச் சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வர்த்தக நிலையங்களும் நிதி நிறுவனங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற பொலிஸார். சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட பல நிலையங்களில்  சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதும், சில நிறுவனங்களில்  வெளிப்பக்கமாக  (வாயில்) சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக கொள்ளையர்கள் வந்த வாகனம்  மற்றும் கொள்ளையர்கள் தொடர்பில் அறிவது பொலிஸாருக்கு  சிக்கலாக அமைந்துள்ளன. அத்துடன் சில நிறுவனங்களில் அபாய ஒலி எழுப்பும் மணியும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நீர்கொழும்பு புஷ்பா ஜுவெலரியிலும் அபாய ஒலி எழுப்பும் மணி பொருத்தப்பட்டிருக்கவில்லை. ஆயினும், அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளனர்.;
இந்த கொள்ளையில்; ஈடுபடுபவர்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் அதனை மேற்கொள்கின்றனர். இதற்கு முன்னர் அந்த நிலையத்திற்கு வந்து கொடுக்கல் வாங்கல்கள்; எவ்வாறு இடம்பெறுகிறது?,  எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளனர்  என்பன போன்ற விடயங்களை அவதானித்தே கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ்  அத்தியட்சகர் ஜயந்த லியனகே  தெரிவிக்கிறார். கொள்ளச் சம்பவங்கள் இடம்பெறும் போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்கள்; அமர்ந்து இருக்க வேண்டும். நடமாடவோ எழுந்து நிற்கவோ முயற்சிக்கக் கூடாது. அது அவர்களுக்கு ஆபத்தாக அமையக் கூடும் எனவும் பிராந்திய பொலிஸ்  அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கிறார்.
வர்த்தக நிலையங்கள் மற்றும்  நிதி நிறுவனங்கள் தமது சுய பாதுகாப்பு முறைகளை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும்.  மணி ஓசை எழுப்புவதோடு; புகை மூட்டத்தை  ஏற்படுத்தக் கூடிய நவீன  பாதுகாப்பு முறைகளையும் பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாடல் முறைகளையும்இது தவிர  வேறு முறைகளையும் கைகொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளைச் சம்பவம் ஏதும் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக  பொலிஸார் வரவேண்டும் என்பது சகலரதும் எதிர்ப்பார்ப்பாகும்.
வெளிநாடுகளில்  சம்பவ இடத்திறகு துரித கதியில் வரும்; பொலிஸார் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு  அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதை பார்க்கிறோம். எமது பொலிஸார் சம்பவம் இடம்பெற்றவுடன் களத்திற்கு வருவார்களாயின் கொள்ளையர்களை மடக்கிப் பிடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதற்கு அவர்கள்  24 மணித்தியாலங்களும் தயாராக இருக்க வேண்டும். தொடர்பாடல் சிறப்பாக பேணப்பட வேண்டும.;
 இதேவேளை, ஆயுத முனையில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமாயின் வாடிக்கையாளர்கள்  அந்த  வர்த்தக நிலையங்களுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவார்கள.; ஓவ்வொருவரும் தமது  உயிரையும் உடைமைளையும் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புவார்கள் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்;றனர்.
யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாது. ஆயுததாரிகள் சுதந்திரமாக நடந்து கொள்ளவோ, அதன் மூலமாக மக்களுக்கு அச்சறுத்தல் விடுக்கவோ. அன்றி மக்களின் உடைமைகளையோ சொத்துக்களையோ  கொள்ளையடிக்கவோ இடமளிக்க முடியாது.  மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கச் செய்யும் எந்தவொரு குழுவுக்கும் இடமளிக்கக் முடியாது. அது காவி உடை தரித்த பேரினவாதிகளாக இருந்தால் என்ன? ஆயுதம் ஏந்திய  முகமூடி கொள்ளையர்களாக இருந்தால் என்ன? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தினாலேயே அந்த குழுக்களை  அடக்கி ஒடுக்க முடியும்.
இனி  முகமூடி நபர்களின் அடுத்த  துணிகரக் கொள்ளை எங்கே? எப்போதுநடக்கும்? மக்கள் 'பிரேக்கிங் நிவ்ஸ்' பார்க்கவும் கேட்கவும்  ஆவலுடன் காத்திருகிறார்கள.;



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்