பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, June 14, 2018

ஆன்மீக இன்பத்தை தந்த புனித ரமழான்



(வீரகேசரி பத்திரிகையில் நோன்புப் பெருநாள்  சிறப்பிதழில் 15-6-2018 அன்று பிரசுரமான கட்டுரை)

- எம். இஸட். ஷாஜஹான் 

ஒரு மாத காலம் ஆத்மீக இன்பத்தை தந்து அருள் மழை பொழிந்த புனித ரமழான் மாதம் நேற்றோடு எமை விட்டு பிரிந்து விட்டது. இன்று நாங்கள் புனித நோன்புப் பெருநாளை பெரு உவகையோடு கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.
இறை பள்ளிவாசல்களில் 'தக்பீர்' முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இறையடியார்களின் உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்தோடுகிறது.
அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு, பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி 'தக்பீர்' முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வோம். பெருநாள் தொழுகை தொழுத பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வோம்.
அதே போன்று, தமது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் வீடுகளுக்குச்  சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். 
இந்த 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.

இறையச்சம் எனும் ஆடை

நாங்கள் இன்று புத்தாடைகளை அணிந்து பெருநாள் கொண்டாடுகிறோம். இந்த ஆடைகள் ஒருநாள் பழைய ஆடைகளாகிவிடும். ஆனால் இறையச்சம் எனும் ஆடையை அணிவதன் மூலமாக உண்மையான பெருநாளைக் கொண்டாட முடியும். அந்த இறையச்ச ஆடையை புனித ரமழான் நோன்பு எமக்கு தருகிறது. இறை விருப்பத்தையம் அவனது நெருக்கத்தையும் அடையும் நோக்கில் நோன்பு நோற்றவர்களுக்கு அந்த ஆடை கிடைத்திருக்கும். நிரந்தரமான பெருநாளுக்கான உடைகள்  பழையதாய்ப் போய்விடுவதில்லை. நாங்கள் அந்த நிரந்தரமான பெருநாளைக்கு தயாராக வேண்டும். அப்படியானால் இறையச்சம் எனும் ஆடையை நிரந்தரமாக அணிந்து கொள்ள வேண்டும்.

பெருநாள் தினத்தில் சிந்திப்போம்
மகிழ்ச்சியான இனிய நாளில் புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை, போதனையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
இன்றைய  பெருநாள் தினத்தில் போட்டி, பொறாமை, கோபதாபங்களை விட்டொழிந்து ஒருவருக்கொருவர் சலாம் கூறி பழையனவற்றை மறந்துவிட வேண்டும். இன்றைய பெருநாள் தினத்தை அதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாம் சாந்தியை, சமாதானத்தை, சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சரியான முறையில் நோன்பு நோற்றதன் மூலமாக இனிய குணம், கற்புடைமை, பொறுமை, நேர்மை, நன்நடத்தை, சகிப்புத் தன்மை, உளத் தூய்மை, வீரம், ஏழைகளின் துயரை உணரும் தன்மை, உதவும் மனப்பான்மை, மனித நேயம் என்பன போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒருவர் அடைந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த நற்பண்புகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பேண வேண்டும்.
நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல, இனிவரும் நாட்களிலும்  உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை பற்றிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்புக் காலங்களில் ஐவேளை தொழுகையோடு, சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத்  தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வரவேண்டும்.
ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வரவேண்டும். நோன்பு கற்றுத் தந்த நற்பண்புகளை ஏனைய மாதங்களிலும் கடைபிடிக்க வேண்டும். ஒரு மாதம் முழுதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும்.  அதற்கானே பயிற்சியே ரமழான் மாதமாகும்.
எமது பெருநாள் கொண்டாட்டங்கள் சகோதர இனங்களுக்கு  முன்னுதாரணமாக அமைய வேண்டும். கேளிக்கைகள், விளையாட்டுக்கள் மற்றையவர்களுக்கு தொந்தரவாக அமையக் கூடாது. எமது மகிழ்ச்சியில் அவர்களையும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.
ஆகவே, இந்த இனிய பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழச்சி மிகுந்த நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக.
ஈத் முபாரக்!!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்